விண்வெளி சுற்றுலாவை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் திட்டம் இல்லை
ஒன்றிய மந்திரி தகவல்
1 min read

No plan to make laws to regulate space tourism-Union Minister informs
28.7.2022
விண்வெளி சுற்றுலாவை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய மந்திரி தெரிவித்துள்ளார்.
விண்வெளி சுற்றுலா
மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் புளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக தற்போது புளூ ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
அந்த நிறுவனம் இந்த வருடத்தில் 3-வது முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு 6 பேர் கொண்ட குழுவுடன் தயாராகி உள்ளது. இந்த பயணத்தின் டிக்கெட் விலை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் 10 நிமிட விண்வெளி சுற்றுலாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 220 கோடி ரூபாய் டிக்கெட் விலை என்ற தகவல் வெளியாகி இருந்தது.
இந்த வருவாயை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் நிறுவனங்கள் தங்களின் பிற விண்வெளி ஆய்வுக்கு அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எதிர்காலத்தில் இது போன்ற விண்வெளி சுற்றுலா திட்டத்தை தொடங்குவதற்கான திறனை இஸ்ரோ மேம்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வளர்ந்து வரும் துறையான விண்வெளி சுற்றுலாவை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களைவையில் நேற்று பதில் அளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், “இஸ்ரோ தற்போது ககன்யான் பணிக்காக உயிர் ஆதரவு அமைப்பு, க்ரூ எஸ்கேப் அமைப்பு , மனித மைய தயாரிப்புகள் மற்றும் குழு மீட்புக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலாவைத் தொடங்க கட்டுமானப் பொருட்களாக செயல்படும். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்பு நெறிமுறைகளை இந்தியா உருவாக்கி வருகிறது” என தெரிவித்தார்.