கொல்கத்தாவில் உழல்புகாரில் சிககிய மந்திரியை நீக்க திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செலாளர் கோரிக்கை
1 min read
Trinamool Congress general secretary demands removal of Chikagiya minister in Uzhalbukar in Kolkata
28.7.2022
திரிணாமுல் காங்கிரசின் அமைச்சகம் மற்றும் அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்கும்படி அக்கட்சியின் பொது செயலாளர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஆசிரியர் நியமனத்தில் ஊழல்
மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக உள்ள பார்த்தா சாட்டர்ஜி, கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. அமைப்புக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
சோதனை
அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது.
கைது
இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறையினர் கடந்த 23-ம் தேதி மாலை கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அர்பிதா முகர்ஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்றும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.15 கோடி கைப்பற்றப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டன என தகவல் வெளியானது. தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் எண்ணப்பட்டது. இது மேற்கு வங்காள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும்போது, அவர்களுக்கு (பா.ஜ.க.) வேலையே கிடையாது. 3 முதல் 4 அமைப்புகளை வைத்து கொண்டு மாநில அரசாங்கங்களை தங்கள் வசம் எடுத்து கொள்வதே அவர்களது வேலை. அவர்கள் மராட்டிய மாநிலத்தினை எடுத்து கொண்டார்கள். தற்போது ஜார்க்கண்ட் மாநிலம். ஆனால், வங்காளம் அவர்களை தோற்கடித்து விட்டது. வங்காளம் உங்களுக்கு வசப்படுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு முதலில் நீங்கள், ராயல் வங்காள புலியுடன் மோத வேண்டும். 2024ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வரவே வராது என்பது எனது நம்பிக்கை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆனால், வங்காளத்தில் அது 45 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, ஊடகங்கள் வழியே ஒருவரின் மதிப்பை சீர்குலைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. வங்காளம் மோசமடைந்து உள்ளது என்ற தோற்றத்தினை ஏற்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என நடிகர் மற்றும் அக்கட்சி உறுப்பினரான மிதுன் சக்ரவர்த்தி கூறினார். இதனால், மராட்டியத்தில் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து தனியாக பிரிந்து, தற்போது பா.ஜ.க. கூட்டணியுடன் ஆட்சி நடந்து வருவது போன்ற சூழல் ஏற்படலாம் என கூறப்பட்டது.
எனினும், இதற்கு பதிலடி தரும் வகையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி. சாந்தனு சென் கூறும்போது, ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என எனக்கு தெரிய வந்தது. அவருக்கு உடல்ரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை. அவருக்கு ஏற்பட்டிருப்பது மனநல பாதிப்பு என நான் நினைக்கிறேன். பிரச்சனை என்னவெனில், அவருக்கு அரசியல் பற்றி தெரியாது என்று கூறினார்.
இதுபோன்ற காரசார வாக்குவாதங்கள் இரு கட்சிகளுக்கு இடையே நாள் முழுவதும் நீடித்து வந்தது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரசின் பொது செயலாளர் குணால் கோஷ் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சகத்தில் இருந்து பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்குவதுடன், அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் அவரை நீக்க வேண்டும். அவர் கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும். எனது இந்த அறிக்கை தவறானது என பரிசீலிக்கப்பட்டால், பின்னர் கட்சியானது அனைத்து பதவிகளில் இருந்தும் என்னை நீக்குவதற்கு எல்லா உரிமையும் உள்ளது என தெரிவித்து உள்ளார். இதனால், திரிணாமுல் காங்கிரசில் புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.