சென்னையை அதிர செய்துள்ள வங்கி கொள்ளை – துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு
1 min read
Bank robbery that rocked Chennai – Rs 1 lakh reward for clues
14.8.2022
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
கொள்ளை
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப் போட்டு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் பணிபுரிந்த முருகன் தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ், இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோரும் வந்தனர். தடைய அறிவியல் நிபுணர்கள் சோதனைக்காக அழைத்து வரபட்டதை அடுத்து, கொள்ளை சம்பவம் நடத்த கோல்டு வங்கியினை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சம்பவம் நடந்த வங்கியானது போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும், அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், மீதம் இருக்கும் அடையாளம் தெரியாத இருவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ் தெரிவித்தார். இந்த நிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கும் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.