சசிகலா அ.தி.மு.கவில் மீண்டும் இணைப்பா? – ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு விளக்கம்
1 min read
Sasikala Reunion with ADMK? – O. Panneerselvam sensational description
17.8.2022
சசிகலா அ.தி.மு.கவில் மீண்டும் இணைப்பா? என்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.அ.தி.மு.க.வின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என ஓ.பன்னீர் செல்வம கூறினார்.
கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
ஒன்றுபட வேண்டும்
சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது., தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. சர்வாதிகாரமும் நடக்காது. இது அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி.
அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.அ.தி.மு.க.வின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை; அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு.
எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்;யாரும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா.
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன். அ.தி.மு.க ஒரே இயக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.