June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை கண்ணன் காலமானார்

1 min read

Nellai Kannan passed away

18.8.2022
பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77.

நெல்லை கண்ணன்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று (வியாழக்கிழமை) உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றிவர்.
தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றிருந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

சர்ச்சை கருத்து

பெருந்தலைவர் காமராஜர் பற்றி அவர் பேசிய வீடியோ வலைதளத்தில் பரவி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரம் கடந்த 2020ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த சர்ச்சை கருத்தை பேசியதற்காக சிறை சென்றிருக்கிறார்.

ஆன்மிக சொற்பொழிவில் பேசும்போதே அவன், இவன் என்று குறிப்பிட்டுத்தான், பொதுவெளியில் நெல்லை கண்ணன் பேசுவார். ஆனாலும், அவரது தமிழ் இனிக்கும்.. அதேசமயம், இவர் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை மிக்கவர்.
1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டார். அன்று அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.. ஆனால், அதிமுகவுக்காக இவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திமுகவை சரமாரியாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் திடீரென அதிமுகதான் சிறந்த கட்சி, ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று கூறினார். 2006-ல் அதிமுகவுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க. மீது பல கூட்டங்களில் வசைபாடினாலும் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சரான பின்னர் அவரை வெகுவாக பாராட்டி பேசினார்.

குடும்பம்

திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை, தாயார் முத்து இலக்குமி. இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேர். நெல்லை கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.