தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள்
1 min read
Python cubs smuggled to Chennai from Thailand
5.9.2022
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 5 மலைப்பாம்பு குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாம்பு குட்டிகள்
சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகளை ரகசியமாக கண்கானித்தனர். அப்போது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய திண்டுக்கலை சேர்ந்த விவேக் (வயது 29) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பிளாஸ்டிக் கூடையில் மலைப்பாம்பு குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வன விலங்கு அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்தனர். இவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்யாமல் வன விலங்குகளை கடத்தி வந்ததால் அவற்றை திரும்பி தாய்லாந்து செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
கைது
இது தொடர்பாக விவேக்கை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் எதற்காக மலைப்பாம்பு குட்டிகளை கடத்தி வந்தார், இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.