ஐ.டி., விண்வெளி துறையில் இந்தியா-வங்காளதேசம் விரிவான ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு- பிரதமர் மோடி பேச்சு
1 min read
India-Bangladesh to work on comprehensive cooperation in IT, space sector – PM Modi’s speech
5.9.2022
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஐ.டி., விண்வெளி, அணுசக்தி துறையில் விரிவான ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு செய்துள்ளதென பிரதமர் மோடி கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இருவரும், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மறுஆய்வு செய்ததுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்று ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஹசீனா 2015-ம் ஆண்டு முதல் 12-வது முறையாக சந்தித்து பேசுகின்றனர். இதற்கு முன், ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொண்டனர். இதனையொட்டி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
சாதனை படைக்கும்
வங்காளதேசம் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதற்கான கொண்டாட்டத்தில் கடந்த ஆண்டு நாங்கள் ஈடுபட்டோம். வருகிற காலங்களில் இந்தியா-வங்காளதேசம் இடையேயான நட்புறவு புதிய உச்சம் தொட்டு சாதனை படைக்கும்.
வங்காளதேசம் இன்று இந்தியாவின் பெரிய வளர்ச்சிக்கான நட்பு நாடாக உள்ளதுடன், இந்த பகுதியில் பெரிய வர்த்தக உறவுக்கான நாடாகவும் திகழ்கிறது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பிலும் தொடர்ந்து வளர்ச்சி காணப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் விரைவாக அதிகரித்து வருகிறது. நாங்கள் ஐ.டி., விண்வெளி மற்றும் அணுசக்தி துறையிலும் விரிவான ஒத்துழைப்புடன் செயல்படுவது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதேபோன்று, இரு நாடுகளுக்கு இடையே மின் பகிர்வுக்கான இணைப்புகளை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என்றும் அவர் பேசியுள்ளார்.