தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்-அமைச்சர் ரகுபதி உறுதி
1 min read
A law will soon be brought to ban online rummy in Tamil Nadu – Minister Raghupathi assured
14.9.2022
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதலளித்த அவர், “இதுதொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும், இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் அந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது, முதல்-அமைச்சரின் விருப்பம். எனவேதான் அதற்கேற்ற வகையில், தற்போது விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில், அதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்படும். பின்னர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரபப்டும்” என்றார்.
நீட்
மேலும், “கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா பொறுத்தவரையில் கவர்னரிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறை மூலம் பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வேந்தர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்டமுன்வடிவுகளும் கவர்னரின் பரிசீலனையில் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.