துணை முதல்-மந்திரி மனைவிக்கு 2 ஆண்டுகளாக பேஸ்புக்கில் தொல்லை கொடுத்த பெண் கைது
1 min read
Woman arrested for harassing Deputy Chief Minister’s wife on Facebook for 2 years
14/9/2022-
மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி மனைவிக்கு 2 ஆண்டுகளாக பேஸ்புக்கில் தொல்லை கொடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
துணை முதல்மந்திரி மனைவி
மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா (வயது 43). இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்துள்ளார். இதனிடையே, அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய, ஆபாசமான கருத்துக்கள் சில கணக்குகளால் பதிவு செய்யப்பட்டு வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச கருத்துக்களை தெரிவித்த பெண்ணை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 50 வயதான ஸ்மிருதி பன்சால் என்ற அந்த பெண் அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெவ்வேறு போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் பதிவு செய்து வந்துள்ளார். கைது செய்யபப்ட்ட ஸ்மிருதி பன்சால் வெவ்வேறு பெயர்களில் பேஸ்புக்கில் போலியாக மொத்தம் 53 கணக்குகளை உருவாக்கியுள்ளார். மேலும், 13 மெயில் கணக்குகளையும் உருவாக்கியுள்ளார். தான் உருவாக்கிய 53 போலி கணக்குகள் மூலம் வெவ்வேறு பெயர்களில் துணை முதல்-மந்திரியின் மனைவி அம்ருதா பேஸ்புக் பக்கத்தில் ஆபாச, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஸ்மிருதி பன்சால் சிறையில் அடைக்கப்பட்டார்.