கோவில்பட்டியில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை
1 min read
Student commits suicide in school toilet in Kovilpatti
21/9/2022
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவி உயிரிழந்த அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலாஜி சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜும் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். மாணவியின் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.