மதுரை விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை – ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
1 min read
Tamil Nadu government did not provide necessary space for Madurai airport – JP Natta alleges
22.9.2022
மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
ஜே.பி.நட்டா
பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில், ஜே.பி.நட்டாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்களுடன், வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-
மின்னணு ஏற்றுமதி
காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பாஜக ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு 65 சதவீத அதிகரித்துள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. இப்போது நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி உள்ளது. எங்கள் கொள்கைகள் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்துறைக்கு ஆதரவானவை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.
விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.