திருப்பதியில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
1 min read
Devotees wait for 16 hours in Tirupati for Sami Darshan
25.9.2022
திருப்பதி கோவிலில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கி உள்ளனர். திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளிக்கின்றன.
திருமலையில் தங்கும் விடுதிகள், சத்திரங்கள் ஆகியவற்றில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். அங்குள்ள முக்கிய சாலைகள், பூங்காக்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி திருமலையில் உள்ள லேப்பாட்சி சர்க்கிள் வரை 1½ கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர்.
அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 48 ஆயிரத்து 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனதாக கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.
முடிகாணிக்கை
கடந்த வெள்ளிக்கிழமை ஏழுமலையான் கோவிலில் 65 ஆயிரத்து 158 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா். 28 ஆயிரத்து 416 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 44 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.