நிச்சயமான பெண்ணை கொன்று புதைத்த வாலிபர் காதலியுடன் கைது
1 min read
A teenager who killed and buried his girlfriend was arrested along with his girlfriend
8.9.2022
ஆந்திர மாநிலத்தில் காதலியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து நிச்சயமான பெண்ணை கொன்று புதைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல்
ஆந்திர மாநிலம் சித்தம்பூட்டைச் சேர்ந்த கொரபுலெட்சுமி (வயது 20) சம்பங்கிப்புட்டைச் சேர்ந்த வண்டலம் கோபால் (வயது 21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேதலா நாராயணம்மா என்பவரது இளைய மகள் சேதல காந்தம்மா (21) என்பவருக்கும் கோபாலுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இந்த நிலையில் கோபால், லட்சுமி காதல் விவகாரத்தை அறிந்த நாராயணம்மா, லட்சுமியை சந்திக்க அனுமதிக்காமல் கோபாலுக்கு கட்டுப்பாடு விதித்தார். காந்தம்மாவுடன் கோபாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்த லட்சுமி, காதலன் கோபாலை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ‘என் சாவுக்கு காரணம் நீதான் என கூறி கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்வேன்’ என மிரட்டினார்.
கொலை
அதனால் பயந்து போன கோபால் கந்தம்மாவை திருமணம் செய்யும் முடிவை கைவிட்டார். மேலும் கோபால் மற்றும் லட்சுமி இருவரும் தங்கள் காதலைத் தொடர காந்தம்மாவை கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள விநாயகர் திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பார்கள், மிகக் குறைவானவர்களே வீட்டில் தங்குவார்கள் என்பதால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் காந்தம்மாவை முடிக்க திட்டம் தீட்டினார்கள். அன்று லட்சுமி, காந்தம்மாவின் வீட்டிற்குச் சென்றார். கோபாலுடனான நிச்சயதார்த்தத்திற்கு காந்தம்மாவை வாழ்த்தினார். பின்னர், காந்தம்மாவை தன் வீட்டிற்குச் செல்ல உடன் வரச் சொன்னார்.
லட்சுமி மற்றும் காந்தம்மா இருவரும் சித்தம்பூட்டில் உள்ள லட்சுமியின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு லட்சுமி மற்றும் கோபால் ஆகியோர் சேர்ந்து காந்தம்மாவை கோடரியால் அடித்தும் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர், லட்சுமியின் வீட்டின் அருகே உடலை புதைத்தனர்.
காந்தாம்மா மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கோபால் மற்றும் லட்சுமியின் காதல் குறித்து நாராயணம்மா சந்தேகம் தெரிவித்தார். கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தின் போது, காந்தம்மா காணாமல் போனது குறித்து கோபாலும், லட்சுமியும் வெவ்வேறு விதமான கருத்துகளை கூறினர்.
கைது
இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை அறிந்த கோபால்,லட்சுமி இருவரும் அங்கிருந்து தலை மறைவானார்கள். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தங்கி அங்குள்ள ஆலையில் பணிபுரிந்தனர். ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று போலீசார் அங்கு சென்று கோபால், லட்சுமி இருவரையும் கைது செய்தனர்.