கொரோனா காரணமாக தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் இந்தியர்கள்
1 min read
79 percent of those forced into extreme poverty due to Corona are Indians
13/10/2022
கொரோனா காரணமாக தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று உலக வங்கி கூறியுள்ளது.
கொரோனா
உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய கொரோனா தொற்று நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வேலைவாய்ப்பை இழந்தார்கள். சிறு குறு நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. நாட்டில் பலரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 7 கோடியே 10 லட்சம் மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள்
இதில் அதிர்ச்சி தரும் விதமாக பாதிக்கப்பட்ட 7 கோடியே 10 லட்சம் மக்களில் கிட்டத்தட்ட 79 சதவீதம் ( 5 கோடி 60 லட்சம்) மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகளாவிய தீவிர வறுமை விகிதம் 2019 இல் 8.4 சதவீதத்திலிருந்து 2020 இல் 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தாலும், 2020ல் உலகளாவிய வறுமை அதிகரிப்பில் சீனாவின் பங்கு குறைவாகவே உள்ளதாகவும் சீனா 2020 இல் மிதமான பொருளாதார அதிர்ச்சியை சந்தித்ததாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.