பாரதியார் பாடலை பாடியபடி 1,550 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை
1 min read
1,550 girl students sang Bharatanatyam, a world record
16.10.2022
சேலம் மாவட்டத்தில் பாரதியார் பாடலை பாடியபடி 1,550 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரதநாட்டியம்
சேலம் குளூரி மெட்ரிக்பள்ளியில் பரதநாட்டியம் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தின நிறைவு விழா மற்றும் உலக ஒற்றுமையை வலியுறுத்தி பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதற்கு பரதநாட்டியம் ஆசிரியர்கள் சங்க தலைவர் லதாமாணிக்கம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ராசிசரவணன், துணை தலைவர்கள் சாய்பிரியா, முத்துலட்சுமி, மணிகண்டன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உலகநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 22 பள்ளிகளில் இருந்து 1,550 மாணவிகள் கலந்து கொண்டு ‘செய்வதை துணிந்து செய்’ என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் பாரதியார் பாடலை பாடியபடி பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி நடத்தினர். பரதநாட்டிய நிகழ்ச்சியை பீனிக்ஸ் வேர்ல்டு ரெக்கார்டு ஆப் புக் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை ஆயர் அருள்செல்வம் ராயப்பன், பரத நாட்டிய ஆசிரியர் சங்க தலைவர் லதாமாணிக்கம் ஆகியோரிடம் வழங்கினர். சேலம் மாகாண குளூனி பள்ளிகளின் தலைவர் நோரா, பள்ளி தாளாளர் லீமா, முதல்வர் ரோஸ்லின் ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர். இதில் மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.