தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அப்போதைய மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை
1 min read
Thoothukudi firing: Inquiry commission recommends departmental action against the then district collector
18.10.2022
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு இன்று நடைபெற்ற சட்டசபை சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்தது.
சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக நடந்த பிரச்சனை காரணமாக இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இல்லாமல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக் தெரிகிறது.
மேலும், அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தெரிகிறது.