சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிப்பு
1 min read
Sardar Vallabhbhai Patel’s birthday is observed as National Unity Day
31.10.2022
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரது படத்திற்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார். குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இரும்பு மனிதர்
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர்.
ஜனாதிபதி மரியாதை
அவரது 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா மற்றும் மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மோடி
சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
அந்த பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கெவாடியாவில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்