ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 6 விவசாய தொழிலாளர்கள் பலி
1 min read
6 farm laborers killed in Andhra electrocution
2.11.2022
ஆந்திர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் வயலில் வேலை செய்த 4 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பலியானார்கள்.
அறுவடை பணி
ஆந்திர பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் ராயதுர்கம் பொம்மசஹால் பகுதியில் தர்காஹொன்னூர் என்ற இடத்தில் விவசாய நிலத்தில் சிலர் அறுவடை பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், துப்பண்ணா என்ற விவசாயி ஆமணக்கு பயிர்களை வெட்டி தனது டிராக்டரில் போட்டபடி இருந்துள்ளார்.
இந்த நிலையில், உயர்அழுத்த மின்கம்பி வயலில் வேலை செய்தவர்கள் மீது திடீரென விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 6 விவசாய தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும், உடனடியாக மின்சார துறை, மின் இணைப்பை துண்டித்தது. இந்த சம்பவத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி இதே மாவட்டத்தில் சிலகொண்டையாபள்ளி என்ற கிராமத்தில் 12 பேரை ஏற்றி சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மின்சாரம் தாக்கியது. அதில், 6 விவசாய பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.