மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 min read
Rajaraja Chola’s fame shines forever like a polar star in the sky; Prime Minister M. K. Stalin
3.11.2022
மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராஜராஜ சோழன்
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சதய விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே, ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும். அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.