முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்
1 min read
133rd Birth Anniversary of Former Prime Minister Jawaharlal Nehru
14.11.2022
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். சோனியா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் நேரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
நேரு பிறந்தநாள்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ” அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எனது மரியாதை. நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சோனியா காந்தி
டெல்லியில் உள்ள சாந்தி வனம் என்ற அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரசார் இன்று சென்றனர். அவர்கள் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது வளர்ச்சிகர எண்ணங்கள், சவாலான சூழலிலும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. ஜனநாயகத்தின் சாம்பியன். உண்மையான தேசப்பற்றாளருக்கு எனது பணிவான அஞ்சலி என அவர் தெரிவித்து உள்ளார்.