தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்
1 min read
புதிய கவர்னர் ஆர்.என்.ரவி
Tamil Nadu Governor RN Ravi’s letter seeking clarification on Online Rummy Prohibition Bill
24.11.2022
கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.. சென்னை, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனலைன் சூதாட்டம்
. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகி இளைஞர்கள். மாணவர்கள், குடும்ப தலைவர்க உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர்.
காவல் துறையைச் சேர்ந்தவர்கள்கூட தற்கொலை செய்து கொண்டனர். எனவே, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இதற்கிடையில், அரசு சார்பில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதாக 70 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும், கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதாக 67 சதவீதம் பேரும், மாணவர்களின் அறிவுத் திறன், சிந்தனைத் திறன், எழுத்துத் திறன் குறைந்திருப்பதாக 74% பேரும், மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருப்பதாக 76 சதவீதம் பேர், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதாக 72 சதவீதம் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 735 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டது. இதில் 99 சதவீதம் பேர், அதாவது 10 ஆயிரத்து 708 பேர் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு மசோதா கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான, சட்ட மசோதா கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கவர்னருக்கு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்.19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.. கவர்னரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது