June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலையில் 2668 அடி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது- 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்

1 min read

Mahadeepam lit on top of 2668 feet hill in Tiruvannamalai – 40 lakh devotees darshan

6.12.2022
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழாவையட்டி இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் அக்னி தலம் என உலகெங்கும் உள்ள பக்தர்களிடையே புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற கார்த்திகைதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபவிழா கடந்த 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனிவந்தனர்.
முக்கிய நிகழ்வுகளன வெள்ளிதேரோட்டம் கடந்த 2ந் தேதியும் மகாதேரோட்டம் 3ந்தேதியும் விமர்சையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து தீபதிருவிழா உச்சவத்தின் 10ம் நாளான இன்று மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டு களாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாத நிலை இருந்தது எனவே இந்த ஆண்டு கூடுதல் உச்சவத்துடன் தீபத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

40 லட்சம் பக்தர்கள்

இதனால் கார்த்திகை தீபத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த தீபம் ஏற்றப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர். அப்போது கோவில் முழுவதும் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.
முன்னதாக பரணி தீபத்தையட்டி கோவிலுக்குள் அதிகாலை 2 மணிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் வளாகத்திற்குள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பரணி தீபத்தைக் காண ஏற்கனவே டிக்கெட் பெற்றிருந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமயநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஏடிஜிபி சங்கர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனந்த தாண்டவம்

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கோவில் பின்புறமுள்ள மலை உச்சியில் இன்று மாலை ஏற்றப்பட்டது. முன்னதாக அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில்உள்ள தீபதரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5.59 மணிக்கு கோவில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்தடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார் அப்போது கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும் சரியாக மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியல் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது திருவண்ணாமலை நகரில் குவிந்திருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு மகாதீப தரிசனம் செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்பட அரசு உயர்அதிகாரிகள் நீதிபதிகள் ஆன்மீக பிரமுகர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது வீடுகள் தோறும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதோடு வானதிர பட்டாசுகள் வெடித்து பக்தர்கள் அண்ணாமலையாருக்கு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர். இதேபோல திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள கிராமங்களில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகே தங்களது வீடுகளில் அகல்விளக்கேற்றி தீபவழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த மகாதீப தரிசனத்தில் கலந்து கொண்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலபாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநேர் அண்ணாமலை அடிஅண்ணாமலை ஆகிய சன்னதிகளுக்கு சென்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையட்டி கிரிவலப்பாதை மற்றும் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்மிக அமைப்புகள் சார்பில் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவையட்டி வடக்கு மண்டல ஐஜி கணணன் தலைமையில் 5 டிஐஜிகள் 32 எஸ்பிகள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலையேறும் பக்தர்களுக்காக 180 சிறப்பு அதிரடி படை வீரர்கள் (எஸ்டிஎப்) பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காணாமல் போன குழந்தைகளை கண்டறியும் கூட்ட நெரிசலில் திருட்டு செயின் பறிப்பு போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் குற்றவாளிகள் நடமாட்டத்தை காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீபத்திருவிழாவையட்டி பக்தர்களின் வசதிக்காக வரும் 8ந் தேதி வரை 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு 63 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கார்வேன் போன்றவைகள் நிறுத்த 59 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள செய்யப்பட்டிருந்தது.
நாளை 7ந்தேதி காலை 8.14 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை மறுநாள் 8ந் தேதி காலை 9.22மணிக்கு நிறைவடைகிறது. மகாதீபதிருவிழா முடிந்தபிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் குடிநீர் கழிப்பிடம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெப்ப உற்சவம்

இந்நிலையில் விழாவின் நிறைவாக 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்ப உற்சவத்தில் நடைபெறுவது தீபத்திருவிழாவின் சிறப்பாகும் அதன்படி நாளை 7ந் தேதி முதல் வரும் 9ந் தேதி வரை ஐயங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். முதல் நாள் இரவு 9 மணியளவில் சந்திரசேகரர் தெப்ப சப்பரத்தில் பவனிவந்து அருள்பாலிப்பார் 2ம் நாள் 8ந் தேதி இரவு 9 மணியளவில் பராசக்தி அம்மனும் 3ம் நாள் 9ம் தேதி இரவு சுப்பிரமணியரும் தெப்பத்தி்ல் பவனியும் வலம் வருவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பல் உற்சவம் ஐயங்குளத்தில் நடைபெறுவதால் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

11 நாட்கள் பிரகாசிக்கும் தீபம்

தீபம் ஏற்றுவதற்கான நெய்திரி கற்பூரம் ஆகியவை இன்று அதிகாலை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகாதீபம் 11 நாட்கள் காட்சியளிக்க உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் மலைமீது செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதிகபட்சம் 2500 பக்தர்களுக்கு மட்டும் புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.