வீட்டு உரிமையாளரிடம் தன்னையே பணயம் வைத்து சூதாடி தோற்ற பெண்- கணவர் போலீசில் புகார்
1 min read
Woman who gambled away herself at the landlord’s house-husband filed a complaint with the police
6.12.2022
லுடோ சூதாட்டத்தில் வீட்டு உரிமையாளரிடம் தன்னையே அடகு வைத்து ஒரு பெண் விளையாடினார். அந்தப்பெண்ணின் கணவர் மனைவியை மீட்டுதரக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சூதாட்டம்
லுடோ என்ற சூதாட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டுகளில் ஒன்றாகும். பகடைகளை உருட்டுவதும், காய்களை நகர்த்துவதும், அந்தந்த நிறத்தின் வீட்டை அடையும் வகையில் விளையாடுவது ஆகும். வழியைத் தடுப்பதும், மற்றவர்களின் ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லுடோவின் எதிர் விளையாட்டாகும்.
ஆன்லைன் கேமிங் அரங்கில் குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அந்நியர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டு விளையாடக்கூடிய விளையாட்டு இதுவாகும். ஆன்லைனில் கூட இதை விளையாட வசதி வந்துவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் விசித்திரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண், தாயக்கட்டை விளையாட்டுக்கு அடிமையாகி தன்னைத்தானே அடகுவைத்து விளையாடியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள நாகர் கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி என்ற கிராமம். இங்கு ரேணு என்ற பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் உமேஷ் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார்.
அங்கு வேலை செய்த பணத்தை வீட்டு செலவுக்காக மனைவிக்கு தினமும் அனுப்பி வந்துள்ளார். ஆனால் வீட்டில் தனியாக இருந்த மனைவி அந்த பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் ‘லுடோ’ விளையாடி வந்துள்ளார்.
பணயம்
இப்படியே தனது கணவர் அனுப்பிய பணத்தை முழுவதும், சூதாட்டத்தில் தொலைத்த அந்த பெண், இறுதியாக தன்னையே பணயமாக வைத்து விளையாடி வந்துள்ளார். அப்போதும் இவர் தோற்றதால், வீட்டின் உரிமையாளருடன் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.
அந்த விளையாட்டில் தோற்றுவிட அவர் வீட்டின் உரிமையாளருடனேயே வாழ ஆரம்பித்துவிட்டார்.
போலீசில் புகார்
இது தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், “எனது மனைவி லுடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.