இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்
1 min read
14 fishermen who were released from Sri Lankan prison arrived in Chennai
7/12/2022
இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
தமிழ் மீனவர்கள்
புதுக்கோட்டை, நாகை, புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களான தினேஷ் குமார், லட்சுமணன், டோமினிக், சிவக்குமார், தென்றல்குமார், அழகர், சஞ்சய் உள்பட 14 தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 16-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை போலீசார் 14 மீனவர்களை கைது செய்தனா்.
பின்னர் அவர்கள் அனைவரையும் படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
விடுதலை
அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் காரைக்கால் மீனவர்கள் 10 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர், நாகை மீனவர் ஒருவர் என 14 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழகம் திரும்பிய 14 மீனவர்களையும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் பா.ஜ.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட 14 மீனவா்களையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.