கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
1 min read
16 tons of ration rice tried to be smuggled to Kerala seized; 2 arrested
14.12.2022
கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீவிர சோதனை
தமிழக கேரளா எல்லையான புளியரை சோதனைச்சாவடி வழியாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,குட்கா புகையிலை பொருட்கள்,மது பாட்டில்கள், ரேசன் அரிசி போன்றவை தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக எஸ்.பி கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புளியரை வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக புளியரை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புளியரை காவல் உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி, காவலர்கள் இசக்கி ,அருணாகரன், இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .
கைது
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கோவில்பட்டியில் இருந்து கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. உடனடியாக அதனை தடுத்து நிறுத்திய போலீசார் லாரியை பறிமுதல் செய்ததோடு கடை ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி சங்கர் நகர் குறிச்சி குளம் பகுதியை சார்ந்த பொன்ராஜ் (வயது 32) ,திருநெல்வேலி சங்கர் நகர் ,ராம் நகர் பகுதியை சேர்ந்த சேது ராமலிங்கம் (வயது 33) என்பது வெளியே வந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 16 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யபட்டு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுது துறை வசம் ஒப்படைக்கப் பட்டது.