மத்திய தணிக்கைத்துறை இயக்குனருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
1 min read
Director of Central Audit Department sentenced to 4 years in jail
14.12.2022
மத்திய தணிக்கைத்துறை இயக்குனருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
லஞ்சம்
மத்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைகள் துறை இயக்குனராக இருந்தவர் பரமசிவன்(வயது 50). இவர், கடந்த 2014-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் விதிமீறலை சரி செய்ய கல்லூரி நிர்வாகத்திடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அறிவுரைப்படி முதல் தவணையான ரூ.5 லட்சத்தை கல்லூரி நிர்வாக அலுவலர்கள் பரமசிவனின் உறவினரான காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றிய சிவராம் திலகரிடம்(40) வழங்கிய போது சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணைக்கு பின்பு பரமசிவன், சிவராம் திலகர், தணிக்கை துறை ஆய்வாளர் துஷார் ரஞ்சன் சாமுவேல்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி தனசேகரன் முன்னிலையில் நடந்தது. சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் சுரேந்திரமோகன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, பரமசிவன், சிவராம் திலகர் ஆகியோர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், சிவராம் திலகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
துஷார் ரஞ்சன் சாமுவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.