ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்
1 min read
Woman’s body cut into 12 pieces in Jharkhand state
18/12/2022
ஜார்க்கண்டில் 12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண் உடல்
ஜார்க்கண்டின் சாகேப்கஞ்ச் நகரில் 22 வயது பழங்குடி இளம்பெண் ஒருவரின் 12 துண்டுகளாக வெட்டப்பட்ட உடலை போலீசார் இன்று கைப்பற்றி உள்ளனர். இதுபற்றி அந்த பெண்ணின் கணவரான தில்தர் அன்சாரி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இந்த வழக்கில் பெண்ணின் சில உடல் பாகங்கள் கிடைக்க பெறவில்லை. அவை காணாமல் போயுள்ளன. அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், கொல்லப்பட்ட பெண், சந்தேகத்திற்குரிய குற்றவாளியான அவரது கணவருக்கு 2-வது மனைவி ஆவார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சமீப நாட்களாக டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொடூர படுகொலைக்கு பின்னர், அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து காணப்படுகின்றன.
உத்தர பிரதேசத்திலும், இதுபோன்று காதலி ஒருவர் காதலனால் கொல்லப்பட்டு துண்டுகளாக வீசப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கிழக்கில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனான அஞ்சன்தாஸ் என்பவரை மனைவி பூனம், தனது மகன் தீபக் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசியது பரபரப்பு ஏற்படுத்தியது. கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்தது.
இந்தியா மட்டுமின்றி, வங்காளதேசத்தில் கூட திருமணம் முடிந்து அதனை மறைத்தது அறிந்து, கேள்வி கேட்டதற்காக இந்து பெண் ஒருவர் சமீபத்தில் கொடூர கொலை செய்யப்பட்டு, துண்டுகளாக்கப்பட்ட சம்பவம் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.