காஷ்மீர் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
3 terrorists shot dead in Kashmir encounter
20.12.2022
காஷ்மீரில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
3 பேர் சாவு
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்டிட் மனைவி
இன்று நடந்த மோதலில் காஷ்மீரி பண்டிட்டான பூரன் கிருஷண் பட் (வயது 48) என்பவரை சுட்டு கொன்ற பயங்கரவாதியை படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இதுபற்றி காஷ்மீரி பண்டிட்டின் மனைவி பேட்டியில் கூறும்போது, நீதி கிடைத்து உள்ளது.
பயங்கரவாதி கொல்லப்பட்டது நடக்க வேண்டிய ஒன்றே. ஏனெனில் அப்பாவி மனிதரை அவர்கள் சுட்டு கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை நல்ல பணியை செய்துள்ளது என கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சவுத்ரிகண்ட் கிராமத்தில் வீட்டுக்கு முன்பிருந்த புல்வெளி பகுதியில் நின்றிருந்த பூரன் கிருஷண் பட் என்பவரை கடந்த அக்டோபர் 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
இந்த சம்பவத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பட் உயிரிழந்து விட்டார். அவருக்கு சுவீட்டி (வயது 41) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகள் மற்றும் 8 வயதில் ஒரு மகன் உள்ளனர்.