ராகுல் காந்தி ஷூ கயிற்றை கட்டி விட்ட முன்னாள் மத்திய மந்திரி; வீடியோவால் பரபரப்பு
1 min read
Former union minister who tied Rahul Gandhi’s shoelaces; Thrill by the video
21.12.2022
காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியின் ஷூ கயிற்றை முன்னாள் மத்திய மந்திரி கட்டி விட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவில் இந்த யாத்திரை நடந்து வருகிறது.
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டியது. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
ஷூ கயிறு
இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியான பன்வார் ஜிதேந்திரா சிங் என்பவர் ராகுல் காந்தியின் ஷூ கயிறு கழன்று இருப்பது பற்றி கவனித்து உள்ளார். உடனே, முன்னே சென்று அவிழ்ந்து கிடந்த ராகுல் காந்தியின் ஷூ கயிற்றை கட்டி விட்டார். ராகுல் காந்தியும் அவரது முதுகில் தட்டி கொடுத்துள்ளார். எனினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க.வின் அமித் மாளவியா இந்த வீடியோவை பதிவிட்டு, ராகுல் காந்தியின் ஷூ கயிற்றை முன்னாள் மத்திய மந்திரி பன்வார் ஜிதேந்திரா சிங் ஓடி சென்று முட்டி போட்டு கட்டி விடுகிறார். ஆணவம் பிடித்த அந்த குழந்தை உதவுவதற்கு பதிலாக, அவரது முதுகில் தட்டி கொடுக்கிறார் என காட்டமுடன் பதிவிட்டு உள்ளார். அவரது இந்த பதிவை அக்கட்சியின் பிற உறுப்பினர்களான தஜீந்தர் பாகா, யோகி பலக்நாத், ரோகித் சஹால், ஹர்ஷ் சதுர்வேதி, ரமேஷ் நாயுடு நகோத்து உள்ளிட்ட மற்றவர்களும் டேக் செய்து டுவிட்டரை பகிர்ந்து உள்ளனர்.