அதிமுக பொதுக்குழு வழக்கு, 10-ந் தேதிக்கு சுப்ரீம்கோர்ட்டில் ஒத்திவைப்பு
1 min read
AIADMK general committee case adjourned to Supreme Court on 10th
6/1/2023
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 10ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அ.தி.மு.க. வழக்கு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தை தொடர்ந்தார்.
“அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விதிமுறைபடி நடைபெறவில்லை. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த பொதுக்குழு அவ்வாறு கூட்டப்படவில்லை. அவைத் தலைவரை வைத்து பொதுக்குழுவை கூட்டினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அப்படி நீக்குவதற்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கவில்லை. எனவே ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக் குழு செல்லாது” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், “ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்” என்று கட்சி விதிகளில் உள்ளதாக வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டபோது அதற்கு நீதிபதிகள் உங்கள் முறை வரும்போது உங்கள் வாதத்தை தொடரலாம் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தொடர்ந்து வாதிட்டார்.
“அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர்” என்று வாதிட்டார்.
மீண்டும்…
நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 12 மணிக்கு தள்ளி வைத்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை மதியம் மீண்டும் தொடங்கியது. வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்தனர். “தன்னிசையான முறையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிகாரம் இல்லை. பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து மட்டுமே கூட்ட முடியும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது. அவை சட்டத்துக்கு புறம்பானவை” என்று அவர்கள் வாதிட்டனர்.
அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாடினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் 6-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறி இருந்ததால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை நேற்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.