திருவண்ணாமலையில் ஆசிரியையின் கணவர் வெட்டிக் கொலை
1 min read
Teacher’s husband hacked to death in Thiruvannamalai
8.1.2023
திருவண்ணாமலையில் அரசு பள்ளி ஆசிரியையின் கணவர்
மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
ஆசிரியை
திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் ஆறுமுகம் (வயது 53). இவரின் மனைவி பிரபாவதி காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஆறுமுகம், நல்லவன்பாளையத்தில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். சனிக்கிழமை இரவு கடையை பூட்டிக் கொண்டு தாமரை நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சுமார் 9-15 மணியளவில் அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஆறுமுகத்தை மடக்கி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
ரோட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஆறுமுகத்தின் உடலை பார்த்தவர்கள் இது குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறுமுகத்துக்கு சொந்தமாக சொத்துக்கள் சில உள்ளன. மேலும் அவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கூலி படையை ஏவி அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நோட்டம் விடப்பட்டு ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் இந்த கொலை நடத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவிக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.