திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு தேர் பீடம்
1 min read
Chariot pedestal for Nityananda’s ashram at Tiruvannamalai
9.1.2023
திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு பெரிய அளவிலான தேர் பீடம் கொண்டு வரப்பட்டு கிரேன் மூலம் இறக்கப்பட்டது.
நித்தியானந்தா ஆசிரமம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், நித்தியானந்தாவின் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. மேலும், கர்நாடக மாநிலம் பிடதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவரது ஆசிரமம் இருந்த நிலையிலும், தற்போது இந்த ஆசிரமங்களில் தங்காமல் கைலாசா எனும் இடத்தில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தங்கி இருக்கும் கைலாசா எனும் எங்கே இருக்கிறது, அங்கே யார்? யார் தங்கி இருக்கின்றார்கள் என்கிற விவரங்கள் எல்லாம் தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் இவரது உடல் நலிவுற்றிருந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் இவரது சீடர்கள் சிலர் மட்டும் தங்கி உள்ளனர். வெளியாட்கள் இந்த ஆசிரமத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.
தேர் பீடம்
இந்நிலையில், ராட்சத லாரி மூலம் தேர் பீடம் கொண்டுவரப்பட்டு நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு உள்ளே வைக்கப்பட்டது. அதனை பெரிய கிரேன் மூலம் இறக்கி வைத்துள்ளனர். சக்கரங்களுடன் கூடிய தேரின் பீடம் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர் எங்கிருந்து கொண் வரப்பட்டது, எதற்காக கொண்டு வந்துள்ளனர், அதன் நோக்கம் என்ன என்கிற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் தரப்பில் கேட்டபோதும் எந்த விளக்கத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து, பல ஆண்டுகளாக நித்தியானந்தரின் வருகையில்லாததால், பரபரப்பு இன்றி காணப்படும் திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு திடீரென மரத்தேர் பீடம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்துமுடிந்த கார்த்திகைதீபத்தின்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த பவுர்ணமி அன்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது இந்த ஆசிரமத்தில் நித்யானந்தாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆன்மீக பணிகள் திருவண்ணாமலையில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கிரிவல பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.