சலவைத் தொழிலாளி கொண்டாடிய ‘வெள்ளாவி’ பொங்கல்
1 min read
‘Vellavi’ Pongal celebrated by the washerman
15.1.2023
சலவைத் தொழிலாளிகள் ‘வெள்ளாவி’ பொங்கலை கொண்டாடினார்கள்.
வெள்ளாவி பொங்கல்
‘வெள்ளாவி பொங்கல்’ என்றால் என்ன தெரியுமா? ஒரு காலத்தில் சலவைத் தொழிலாளிகள் துணிகளை வெள்ளாவியில் வைத்து துவைப்பார்கள். அதாவது உவர் மண்ணை எடுத்துவந்து அதை தண்ணீரில் கலந்து துணியை நனைப்பார்கள். அதன்பின் பெரிய அடுப்பில் பானையை வைத்து அதன் மேலும் உவர் மண்ணில் உற வைக்கபட்ட துணை வைப்பார்கள். அதன்பின் துணையை துவைப்பார்கள். இதானல் துணி நன்றா வெளுக்கும். கரை இருவ்தாலும் போய்விடும்.
தற்போது நவீன காலத்தில் துணிகள் பருத்தியில் அதிக அளவில் வரவில்லை. பாலியஸ்டர் துணிகள் தான் அதிகம் வருகிறது. இதனால் வெள்ளாவி சலவை மறைந்தவிட்டது.
வெள்ளாவிக்கு பயன்படுத்தும் மண்பானைக்கு ‘வெள்ளாவி பானை’ என்று பெயர்.
தேனி
தேனி மாவட்டம் வைகை அணையின் அருகில் வைகை ஆற்றின் இரு கரையின் ஓரமும், ஏராளமான வெள்ளாவி இப்போதும் அடுப்புகள் உள்ளன. அந்த வெள்ளாவி அடுப்பின் அருகில், சலவைத் தொழிலாளர்களின் காவல் தெய்வமான மாடசாமிக்கு ஒரு சிறு பீடம் அமைக்கப்பட்டிருக்கும். உழவர்களை கொண்டாடுவதற்கு தைப்பொங்கல், கால்நடைகளை வணங்கும் மாட்டுப் பொங்கல் போன்று, சலவைத் தொழிலாளர்கள் தங்களை பாதுகாக்கும் காவல் தெய்வமான மாடசாமி, வெள்ளாவி பானை ஆகியவற்றை ஒருசேர வணங்கும் வகையில், ‘வெள்ளாவி பொங்கல்’ வைத்து வழிபடுவதை பல தலைமுறையாக பின்பற்றி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தோடு, வெள்ளாவி பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனர். இதுபற்றி வைகை அணையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்தையாவிடம் கேட்டபோது, “பெரும்பாலான ஊர்களில் சலவைத் தொழில் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது மயானம், சுடுகாடு பக்கத்தில்தான் இருக்கிறது. சலவை செய்யும் இடங்களில் பூச்சிகள், பாம்புகள் உலா வரும். அவற்றால் எங்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், எங்களது காவல் தெய்வமான மாடசாமி தான் பாதுகாத்து வருகிறது. அதனால், மாடசாமியை வணங்கி விட்டு தான் அன்றாடம் வேலையைத் தொடங்குவோம்.
அதுபோல் வெள்ளாவி அடுப்பு மற்றும் வெள்ளாவி பானை எங்களுக்கு சாமி போன்றது. வெள்ளாவி வைக்கும் போது பயபக்தியோடு இருப்போம். பெரும்பாலும் வெள்ளாவி அடுப்பை மாலை நேரத்தில்தான் பற்ற வைப்போம். இரவு முழுவதும் அடுப்பு அணையாமல் இருக்கும். மறுநாள் காலையில் துணியை எடுக்கும் போது எந்த சேதமும் இருக்காது. பானையில் இருக்கும் தண்ணீரும் வற்றாமல் இருக்கும். கடவுளின் அருள் இன்றி இது சாத்தியம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 7-ந் தேதிக்கு பிறகு ‘வெள்ளாவி பொங்கல்’ வைப்போம். தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் எங்கள் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளாவி பொங்கலை வெவ்வேறு நாட்களில் கொண்டாடி வருகின்றனர். எனவே, அரசு எங்களின் வழிபாட்டு முறையை கவனத்தில் கொண்டு தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்று தை மாதத்தில் ஒரு நாளை ‘வெள்ளாவி பொங்கல்’ என்று அங்கீகரித்து அறிவிக்க வேண்டும்” என்றார். இன்றைய கால கட்டத்தில் வெள்ளாவி போடுவது அரிதாகி விட்டது. தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே வெள்ளாவி போடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.