தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
1 min read
It is sad that the excellence of Tamil is not known enough. Governor RN Ravi speech
21.1.2023
தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் கவர்னரின் அனுபவம் பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:-
அனுபவம் புதுமை
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி, தற்போது தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம், புதுமையானது. திடீரென மத்தியில் ஆட்சி மாறியதும், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றுமாறு பிரதமர் என்னை கேட்டுக் கொண்டார். நான் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டேன். மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இடம் என்பதால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட நான் அங்கு சென்றேன். நான் ஐ.பி.எஸ். பணியில் கேரள பிரிவு அதிகாரியாக இருந்தேன்.
கற்றல் அனுபவம்
தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது அதற்கும் இங்குள்ள மொழி மற்றும் மக்களும் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷ யங்களை தெரிந்து கொண்டேன்.
நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம். இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். கலாசாரம் மிகவும் ஆழமானது மற்றும் வளமானது.
தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது, ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழின் செழுமையை நாடு முழுவதும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் வரலாற்றை எல்லாம் படித்து வருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே முறையில் பின்பற்றப்பட்ட பல ஆயிரம் உடைக்கப்படாத கலாசார மரபுகளைக் கொண்ட இடமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழகம் உடைக்க முடியாத பாரம்பரிய தொடர்பை கொண்டிருப்பதாகவும், வெளிநாட்டில் குடியேறிய தமிழ்நாட்டு மக்கள் அங்கு தமிழ் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.
பெருமை
தமிழ்நாட்டின் கவர்னராக நான் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். புதிய மனிதர்கள், புதிய விஷயங்களை அறிவது, வரலாற்று இடங்களுக்குச் செல்வது போன்ற மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற இந்த பணி எனக்கு உதவுகிறது.
பயிற்சி பெறும் அலுவலர்கள் அனைவரும் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகள், பழங்கால கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்கள், தஞ்சை கோவில்கள் போன்ற இடங்களுக்குச் சென்றால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டிடக்கலை கூட தோற்கும். அந்த இடங்களின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தான வளம் வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.