இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
1 min read
Petition to ban BBC News in India dismissed in Supreme Court
10.2.2023
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிபிசி செய்தி நிறுவனம்
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில்அை எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. “இந்தியா: மோடி கேள்விகள்” என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.
தடை
இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது.
இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.
வெளியிடப்பட்டது
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வழக்கு
இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும், இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு ஆவணப்படம் நாட்டை எப்படி பாதிக்கும்? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.