குற்றாலத்தில் குத்தகை பணம் செலுத்தாத கடைகளுக்கு சீல்
1 min read
Sealing of shops for non-payment of rent in court
24/2/2023
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு மூன்றாண்டுகளுக்கு மேல் குத்தகை தொகை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
குத்தகை
குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் குற்றாலத்தில் ஏராளமாக உள்ளன. இந்த கடைகளை அந்தப் பகுதியைச் சார்ந்த பலர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையினை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து பலமுறை நேரடியாகவும், கடிதம் மூலமாகவும், நோட்டீஸ் அனுப்பியும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் குத்தகை பாக்கித் தொகையை செலுத்தாத கடைகளை குற்றாலம் பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.
குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய வணிக வளாக சைவ உணவு விடுதி , பேருந்து நிலைய கடை எண் .1 , 3 , 9 , செங்கோட்டை சாலை வணிக வளாக கடை எண் .5 மற்றும் ஐந்தருவி கார்பார்க் கடை எண் .102 . 210 ஆகிய கடைகளுக்கு மூன்றாண்டுகளுக்கு மேல் குத்தகை தொகையினை செலுத்தாத காரணத்தால் பல அறிவிப்பு நோட்டீஸ்கள் நேரடியாகவும் , கடிதம் மூலமும் வழங்கப்பட்டது . நாளது தேதி வரை நிலுவை குத்தகை தொகை செலுத்தாத காரணத்தினால் அந்த கடைகளை பேருராட்சி அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர்.
குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷமா முன்னிலையில் பேரூராட்சி சுகாதார அலுவலர் இராஜகணபதி , தலைமை எழுத்தர் கனகராஜ் , இளநிலை உதவியளார் ஜவகர் மற்றும் பணியாளர்கள் மூலம் மேற்படி கடைகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு பேரூராட்சி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது . இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குற்றாலம் காவல்நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இது பற்றி குற்றாலம் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது :-
மூன்றாண்டுகளுக்கும் மேல் குத்தகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளோம்.
மேலும் குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பாக்கி தொகையினை உடனடியாக பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் இதுபோன்ற கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் குற்றாலம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உடனடியாக பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.