June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

செல்போன்களில் வரும் ‘லிங்க்’கை தொட்டால் பணம்போய் விடும்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

1 min read

If you touch the ‘link’ on cell phones, money will go away – D.G.P. Shailendrababu Warning

10.3.2023
கடந்த சில நாட்களாக புதிய வகையிலான ‘கூகுள் பே’ மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள். ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம். ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கைவரிசை காட்டுவதால் அவர்களை கண்டுபிடித்து நெருங்குவது என்பது போலீசுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது.
இதனால் வந்தபின் அலறுவதை விட வரும் முன் காப்பதே மேல்' என்பதற்கிணங்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற் கொண்டு வருகிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள் என்பார்கள். அந்த வகையில் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் புதுப்புது வழிகளில் ஊடுருவி மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள். இதன்படி கடந்த சில நாட்களாக புதிய வகையிலானகூகுள் பே’ மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள். குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கி கணக்கில் தூண்டில் போல போட்டு அதன்மூலம் பெரிய தொகையை கறக்கும் மோசடி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி வலை எப்படி விரிக்கப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம். கூகுள் பே என்று அழைக்கப்படும் ஜி பே' மூலமாக பணம் அனுப்புவது என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாததாகவே மாறி இருக்கிறது. இப்படி கூகுள் பே மூலமாக பணம் அனுப்பும் நேரங்களில் சில நேரங்களில் தவறுதலாக நாம் வேறு யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டு திருப்பி கேட்டிருப்போம். அதேநேரத்தில் யார் என்றே தெரியாத மற்றவர்களும் நமது வங்கி கணக் குக்கு பணத்தை அனுப்பி விட்டு திருப்பி கேட்டிருப்பார்கள். இந்த நடை முறையை பின்பற்றித்தான் புதிய மோசடி கும்பல் மக்களின் சேமிப்பு பணத்தை களவாட களமிறங்கி உள்ளது. சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரசாலிகள் போல மோசடி ஆசாமிகள் செயல்படுகிறார்கள். உங்கள் வங்கி கணக்கில் சில ஆயிரங்களை ஜி பே மூலம் அனுப்பி விட்டு உங்கள் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.எனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு பணம் அனுப்பி உள்ளேன். அது தெரியாமல் உங்களுக்கு வந்துவிட்டது. அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் பிளீஸ்…’ என்று கூறுகிறார்கள். இப்போதுதான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இதன் பின்னர் எதிர் முனையில் பேசும் நபர் ஒரு லிங்'க்கை அனுப்புகிறேன். அதில் போய் எனது பணத்தை அனுப்புங்கள் என்று கூறி குறிப்பிட்ட லிங்கையும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்ததும் ஓ.டி.பி. எண் வரும் அந்த எண்ணை எதிர் முனையில் பேசும் நபர் கேட்பார். நீங்கள் ரகசிய குறியீட்டு எண்ணான ஓ.டி.பி.யை சொன்னதும் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த சேமிப்பு தொகையும் காணாமல் போய் இருக்கும். இது போன்ற நூதன மோசடி கடந்த ஒருவாரமாகவே அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி வருகிறேன். உங்கள் வங்கி கணக்கையோ, ரகசிய குறியீட்டு எண்ணையோ வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள். இதனை பலமுறை பொது மக்களிடம் எடுத்துக் கூறி உள்ளோம். ஆனால் வங்கி விவரங்களை கொடுத்து பொதுமக்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது கூகுள் பே மூலம் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஏமாற்றி பொதுமக்களின் வங்கி கணக்கை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் உஷாராக இல்லை என்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும். தமிழக காவல் துறையில் உள்ளகாவல் உதவி செயலி மற்றும் 1930 எனும் அவசர உதவி எண் ஆகியவற்றின் மூலமாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் செய்தால் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கி கணக்குக்கு பணம் சென்ற 24 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும். எனவே அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி தொடர்பான தகவலை கேட்டால் இணைப்பை துண்டித்து விடுங்கள். `கூகுள் பே’யில் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று யாராவது போனில் தெரிவித்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி விவரத்தை தெரிவியுங்கள். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தெரியாமல் பணத்தை அனுப்பி இருந்தால் நிச்சயம் நேரில் வருவார். அப்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். இதுபோன்று உஷாராக செயல்பட்டு பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.