இந்தியாவில் தினசரி கொரோனா மீண்டும் ஆயிரத்தை தாண்டியது
1 min read
Daily corona in India crosses thousand again
22.3.2023
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. ஆனால் மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 280 பேர், குஜராத்தில் 176 பேர், கேரளா மற்றும் கர்நாடகத்தில் தலா 113 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 662 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 279 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 467 உயர்ந்துள்ளது.
அதாவது இன்று காலை நிலவரப்படி 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
4 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், சத்தீஷ்கரில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.