ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது
1 min read
The Tamil Nadu Government sent the Online Gambling Prohibition Bill back to the Governor
24.3.2023
கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் மசோதாவை கவர்னர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை சட்டசபை கூடியதும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்துக்கட்சி சம்மதத்துடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சட்டசபையில் மீண்டும் நிறைவேறிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று கவர்னர் மாளிகைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.