June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரி சாலை விபத்தில் 4 பேர் பலி

1 min read

4 killed in Kanyakumari road accident

12.5.2023
கன்னியாகுமாரி சாலை விபத்தில் 4 பேர் இறந்தனர் .உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கன்னியாகுமரியைச் சேர்ந்த இசை கச்சேரி குழுவினர், சுமோ வாகனத்தில் சொந்த ஊருக்கு இன்று காலை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் வாகனம், திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்தும் சுமோ வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண நிதி

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் கிராமம், லாயம் விலக்கு பகுதியில் இன்று (12-5-2023) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்த நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சதீஸ் (37), கண்ணன் (23), அஜித் (22) மற்றும் அபிஷேக் (22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சஜிதா (37), நிதிஸ் (22), விக்னேஸ் (22), நிசாந்த் (18), சஜின் (18) மற்றும் சிறுமி அனாமிகா (11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.