கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறும் நடவடிக்கை; மு.க. ஸ்டாலின் விமர்சனம்
1 min read
Withdrawal of Rs.2000 notes to hide the Karnataka fiasco; M.K. Criticism of Stalin
20.5.2021
கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு உள்ளான ரூ.500, ரூ.1000 நோட்டுகளையும் சுட்டிக்காட்டி கவிதை வடிவில் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது:-
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று, நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும், பொதுமக்கள் செப்டம்பர் 30-க்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வரவேற்பும், எதிர்ப்பும்… ரூ.2000 நோட்டை திரும்ப பெறும் முடிவுக்கு வங்கி ஊழியர் சங்ககூட்டமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ‘ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது ஏற்கெனவே நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு சிறந்த நடவடிக்கை. இது மிகவும் வரவேற்கத்தக்கது’ என்று கூட்டமைப்புகள் தெரிவித்தன.
ஆனால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்றுள்ளது. 2016ல் நாங்கள் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு செய்த மிகப்பெரிய பிழையை சமாளிக்க, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது முட்டாள்தன நடவடிக்கை என்பது உறுதியானது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் சில வாரங்கள் கழித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 500 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தும் நிர்பந்தத்துக்கு உள்ளாகின. எனவே ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பெங்களூரு செல்லும் சூழலில் கர்நாடக தேர்தலை தொடர்புபடுத்தி ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.