கடையநல்லூரில் நவீன தானியங்கி சிக்னல்கள்-விதி மீறினால் காட்டிக்கொடுத்துவிடும்
1 min read
Automated Signals with Artificial Intelligence in Kadayanallur
7.6.2023
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு பெண்கள் பெண் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சிக்னல்கள்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமை வகித்து தானியங்கி சிக்னல்களை இயக்கி வைத்தார். தென்காசி மதுரை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மாணவிகள் செல்வதற்கு வசதியாக பாதசாரிகள் சிக்னல் மற்றும் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலை பகுதியில் இரு புறமும் சிக்னல்கள் இயக்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கூறியதாவது:-
இந்த சிக்னல்களில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் சிக்னலை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள், மூன்று பேருடன் செல்லும் வாகனங்களை சரி பார்த்து அபராதம் விதிப்பர். அதுபோல் காவல்துறையினர் இல்லாமலேயே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்து அவர்களுக்கான அபராதத்தையும் குறுஞ்செய்தியாக இத்தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.
ஐடிஎம்எஸ். தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த தானியங்கி கேமராக்கள் இவ் வழியாக செல்லும் வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும். இதன் மூலம் ஏற்கெனவே குற்றவழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், திருட்டு வாகனங்கள் குறித்து ஒப்பீடு செய்து அது குறித்த எச்சரிக்கை செய்தியை காவல்துறைக்கு இந்த தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.
இந்த தொழில் நுட்பம் போக்குவரத்து துறையின் பரிவாகன் தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக
காவல்துறையினர் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலங்குளம்
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் உள் கோட்டத்தில் இரண்டு இடங்களில் இது போன்ற செயற்கை நுண்ணறியுடன் கூடிய தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தானியங்கி கேமராக்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். நிகழ்ச்சியில் புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, தென்காசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபு, கடையநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கிருஷ்ணன், தொழிலதிபர்கள் அமானுல்லா ,செல்வம் ,ரவிச்சந்திரன், பகதூர் ஷா , தானியங்கி சிக்னல் டெக்னிக்கல் பிரிவு இன்ஜினியர்கள் அஜீஸ், ஜீவிதா, ராமலிங்கம் சண்முகம் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்