கோவை விபத்தில் சிக்கிய பெண்ணிற்கு வெங்கடாம்பட்டி வாலிபர் இரத்ததானம்
1 min read
Venkadampati youth donates blood to woman involved in Coimbatore accident
7.6.2023
தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டியைச் சேர்ந்தவர் நன்னன். 22 வயது இளைஞரான இவர் சி.ஏ படித்து வருகிறார். தனமணி என்ற ஒரு பெண் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் மிக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலை நன்னன் பெற்றவுடன் இரத்ததானம் செய்ய கோவை விரைந்தார்.
இதுபற்றி தனது தந்தையார் திருமாறன் தாயார் சாந்தியிடம் தகவல் சொல்கிறார். இன்னுயிரை அவசர காலங்களில் இரத்த தானம் செய்து காப்பது மகத்தான மனிதநேயம் என பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர்.
கணவனுடன் வந்த பெண் விபத்தில் சிக்கி கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து,அவரது மனைவி மட்டும் உயிருக்கு போராடும் நிலை. உயிர் பிழைக்க ஏ பாசிடிவ் இரத்த வகை தேவைப்படுகிறது. என்று தகவலறிந்த வெங்காடம்பட்டி நன்னன் மற்றும் திருநெல்வேலி ராம் சங்கர் கோவைக்குச் சென்று அந்தப் பெண்மணியை அறுவை சிகிச்சையின் போது இரத்ததானம் செய்து காப்பாற்றினர்.
இந்த காலத்தில் இரத்த தானமும் பெரிதில்லை.
ஏ பாசிட்டிவ் இரத்தமும் அரிதில்லை. எனவே பயம் அகன்று நிறைய இளைஞர்கள் இரத்ததானம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் நன்னனின் பெற்றோரே இரத்ததான விஷயத்தை அறிந்து ஆதரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதுதான் இங்கே சிறப்பு.. பிறர் உயிர் காக்கும் தருணத்தில் பெற்றோர் தடுக்காமல் முழு மனதுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
நன்னன் இதுவரை மூன்று முறை இரத்த தானம் செய்துள்ளார். முக்கியமாக இரத்ததான குடும்பத்தைச் சேர்ந்தவர் நன்னன். அவரது சொந்த கிராமமான தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி இந்தியாவின் முதல் இரத்ததான கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இரத்த தானம் இரண்டு பெரிய வேலைகளை செய்யும். ஒன்று உயிர் காக்கும் வேலை. மற்றொன்று வேற்றுமைகளை வேரரறுக்கும் வேலை. ஜாதி, மத, இன, நிற, பண பேதங்களை கச்சிதமாக முடிவுக்கு கொண்டுவர இரத்ததானம் மிகச்சிறந்த காந்திய ஆயுதம் என நன்னன் தெரிவித்தார்.