அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read
Minister Senthil Balaji arrested: admitted to hospital
14.6.2023
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஒமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். 8 நாட்கள் வரை நீடித்த இந்த சோதனை 3-ந்தேதி நிறைவடைந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, சகோதரர் அசோக்குமார் வீடு, கொங்குமெஸ் மணி, ஆடிட்டர் வீடு, நகைக்கடை உள்ளிட்ட 8 இடங்களில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.
கைது
சென்னையில் அமலாகத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. சுமார் 12 மணி நேர சோதனைக்குப்பின் விசாரணைக்கு அமைச்சர் செந்தி்ல் பாலாஜியை அழைத்துச் செல்ல முயன்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், அவரை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால் சில நடைமுறைகளை பின்பற்றுவார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தார்கள் என்றால், அதுகுறித்து சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படுவார்கள். சட்டப்பேரவை செயலகம் மூலம் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும். சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால் உடனடியாக சட்டப்பேரவையில் தெரியப்படுத்தப்படும்.. சட்டப்பேரவை நடைபெறாத நிலையில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
அவசர சிகிச்சை பிரிவு
செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடம் பல அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். அவர்கள் செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை என்றார்கள்.
செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் ( ஐசியூ) சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை எனத் தகவல் வெளியானது.
அமைச்சர் சேகர் பாபு அவரை சந்திக்க சென்றார். அப்போது, செந்தில் பாலாஜி என்று அழைத்தபோது எந்தவித சமிக்ஞையும் அவரிடம் இருந்து வரவில்லை. சுயநினைவின்றி உள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ”அமைசச்ர் செந்தில் பாலாஜியின் உடலநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார். இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜி கைது சம்பவத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீமானும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
போலீஸ் குவிப்பு
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், மாவட்ட பா.ஜ.க. அலுவலகம், மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சர்ச் கார்னர், வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தங்களது ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.