June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு

1 min read

Minister Senthil Balaji case- Enforcement Department opposes grant of bail

14.6.2023
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை என்று அமலாக்கத்துறை வாதிட்டது.

செந்தில் பாலாஜி கைது

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அமைச்சருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் வந்து சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டந்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.

ஜாமீன்

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வாதத்தின்போது அமலாக்கத்துறை கூறியதாவது:-

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டன. கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார். நீதமன்ற காவல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமின் தான் கோர வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சரியானது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார். இன்று திடீரென உடல்நலக் குறைவு என்கிறார். செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சையை அமலாக்கப் பிரிவே வழங்கும்.
இவ்வாறு அமலாக்கத்துறை வாதிட்டது.
மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், 15 நாள் அமலாக்கத்துறை காவல் கேட்ட வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.