டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை ஆஜராக உத்தரவு
1 min read
Annamalai ordered to appear in defamation case filed by DR Balu
15/6/2023
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதில் கோர்ட்டில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டு புகார் தெரிவித்தார். இதில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சொத்துப்பட்டியல் அவதூறாக வெளியிடப்பட்டு இருப்பதாக கூறி தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வழக்கு
இதையடுத்து, தி.மு.க.நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன் மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் வந்தது. அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.