மூணாறு அருகே அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயர சிலை
1 min read
An 8 feet tall elephant statue of Arisikkompan near Munnar
16/6/2023
மூணாறு அருகே அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயர சிலை வைக்கப்பட்டு உள்ளது. இதைக்கண்டு சுற்றுலா பயணிகள் வியப்பு அடைந்துள்ளனர்.
அரிசிக் கொம்பன்
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கேரளவனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் சிக்னல் காலர் ஐடி பொருத்தி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து லோயர்கேம்ப் வழியாக படிப்படியாக முன்னேறிய அரிசிக்கொம்பன் கடந்த மாதம் 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்பு கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டவனப்பகுதியில் விடப்பட்டது.
போராட்டம்
ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வந்து விடவேண்டும் என தொடர் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்ததாக அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் இதேபகுதிக்கு கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். அவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிலை
அரிசிக்கொம்பன் யானைக்கு ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டது. மேலும் பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூணாறு அருகே கஞ்சிக்குழி ஊராட்சிக்குட்பட்ட தல்லக்காணம் பகுதியை சேர்ந்த வியாபாரி பாபு என்பவர் அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார். சிறுவயது முதலே யானை மற்றும் வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இவர் அரிசிக்கொம்பன் யானைமீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது அந்த யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார். அரிசிக்கொம்பன் யானை வடிவில் ரூ.2 லட்சம் செலவில் அமைத்துள்ள சிலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொதுமக்கள் அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்