மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 உச்சி மாநாட்டை ஸ்மிருதிராணி தொடங்கி வைத்தார்
1 min read
Smriti Rani inaugurated the Women’s G20 Summit at Mamallapuram
16.6.2023
மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 உச்சி மாநாட்டினை மத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைத்தார். இதில் 18 நாடுகளை சேர்ந்த 150 வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஜி20 உச்சி மாநாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் மகளிர் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
இந்நிலையில் இம்மாநாட்டிற்கு மகளிர் ஜி20 அமைப்பின் தலைவரும், சங்கீத நாடக அகாடமியின் தலைவருமான டாக்டர் சந்தியா புரேச்சா தலைமை தாங்கினார்.
மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை மந்திரி ஸ்மிருதிராணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிர் ஜி20 மாநாட்டினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்று புகழ் வாய்ந்த இயற்கை எழில் சூழந்த நகரமான மாமல்லபுரத்தில் இந்த மகளீர் ஜி20 மாநாடு நடபெறுவது மகிழ்ச்சியாகும். இந்த மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு பெண் பிரதிநிதிகளை வரவேற்பதில் மி்க்க மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களின் நிதிகுறித்த கல்வியறிவு, டிஜிட்டல் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் இந்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் ஊர்ந்து கவனிக்க வேண்டும். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு தொடக்க நிகழ்வாக இந்த மகளிர் ஜி20 மாநாடு கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டு மலர்
மகளிர் ஜி20 மாநாட்டு மலரை மந்திரி ஸ்மிருதிராணி விழா மேடையில் வெளியிட்டார். இந்த மாநாட்டு மலரின் பிரதிகள் வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் அனைவருக்கும் மாநாட்டு குழுவினர் வழங்கினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் பலர் ஸ்மிருதிராணியுடன் குழுவாகவும், தனித்தனியாகவும் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
அதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள பெண் பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கில் பறக்கும் தங்கள் நாட்டு தேசியகொடி முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டதையும் காண முடிந்தது.
முன்னதாக பல்வேறு சுய தொழில்கள் மூலம் சாதனை படைத்து வரும் பெண்கள் பலர் மகளீர் ஜி20 உச்சி மாநாட்டின் அரங்கில் தங்கள் கலைப்பொருட்களை காட்சி படுத்தி வைத்திருந்தனர். இந்த கண்காட்சி அரங்கினை மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திறந்துவைத்து பார்வையிட்டார். அப்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த சுய தொழில் செய்யும் பெண்கள் பல்வேறு கலைப்படைப்புகளையும், உணவு பொருட்களையும் காட்சிபடுத்தி இருந்தனர். நேரலையாக சில பெண்கள் அழகழகான சுடுமண் சிற்பங்கள் செய்து காட்சி படுத்தினர். புடவைகளில் ஜி20 மகளீர் மாநாட்டு அடையாளத்தை ஜரிகை வேலைப்பாடுடன் சில பெண்கள் செய்து காட்சி படுத்தி இருந்தனர். பெண்களே வடித்த கற்சிற்பங்கள், மரத்திலான கலை படைப்புகள் காட்சி படுத்தியிருந்தனர். ஊட்டி தோடர் இன பெண்களின் கைவண்ணத்தில் தயாரான துணி பைகள் அதேபோல் ஜவ்வாது மலை தேன், மறுக்கு போன்ற திண் பண்டங்களும் காட்சி படுத்தப்பட்டு இருந்தனர். இவற்றை மத்திய மந்திரி ஸடமிருதிராணி பார்த்து ரசித்து சுய தொழி்ல்களில் வருமானம் ஈட்டும் பெண்களின் தனித்திறமையை பாராட்டி வாழ்த்தினார்.
பாதுகாப்பு
2 நாட்கள் நடைபெறும் ஜி20 பெண்கள் மாநாட்டினை முன்னிட்டு மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் ஆய்வாளர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் ஜி20 மாநாடு நடைபெறும் ஓட்டல் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று இந்த ஓட்டலுக்கு தங்க வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பலத்த பரிசோதனை செய்யப்பட்ட பிறகே ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.