செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி விவகாரம்- சபாநாயகர் அப்பாவு விளக்கம்
1 min read
Senthil Balaji’s Ministership Issue – Speaker Appa’s explanation
16.6.2023
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.
செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அதிகாரம் இல்லை
செந்தில் பாலாஜி முதல்வர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம். இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உண்டு. கடந்த 2010ம் ஆண்டு அமித்ஷா சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். எடுத்தோம், கழித்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல. அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.