சங்கரன்கோவிலில் போக்கு வரத்து தொழிலாளர் ஓய்வு அறைக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
1 min read
Minister Sivashankar laid the foundation stone for the traffic workers rest room at Shankaran temple.
2.7.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர் ஓய்வு அறை முதல் தளம் கட்டும் பணி மற்றும் தானியங்கி பேருந்து சுத்தம் செய்யும் இயந்திரம் நிறுவுவதற்கு ஆகிய கட்டுமான பணிகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், வாசுதேவ நல்லுார் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.தி.சதன் திருமலைக்குமார், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்துத் துறையினை மிக சிறப்பாக நடத்தி வருகிறார். பெண்களுக்கென பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து திறம்பட செய்து வருகிறார். அரசு பேருந்தில் மகளிருக்கு இலவசம் இதன் மூலம் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பயன் பெறுகின்றனர்.
இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள தொழிலாளர் ஓய்வு அறை முதல் தளம் கட்டும் பணி மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள தானியங்கி பேருந்து சுத்தம் செய்யும் இயந்திரம் நிறுவுவதற்கு ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுபோல 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்கள் தொகுதியில் உள்ள பணிமனையினை சீரமைக்க நிதி ஒதுக்கி தரப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கும் பழைய பேருந்துகள் சீரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரும் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுபோக்கவரத்து கழகம் திருநெல்வேலி நிர்வாக இயக்குநர் இரா.மோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சு.தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் .எஸ்.உமா மகேஷ்வரி, சங்கரன்கோவில் நகர்மன்ற துணை தலைவர் கே.கண்ணன், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சங்கரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கு.தமிழ்செல்வி, தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் திருநெல்வேலி பொது மேலாளர் வே.சரவணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.